கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க, ‘’கூட்டமாக யாரும் கூட வேண்டாம்’’ என ஆணை பிறப்பித்துள்ள கேரள அரசு, சினிமா தியேட்டர்கள்,மால்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் மூடி விட்டது.

ஆனால் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மதுக்கடைகளை மட்டும் மூடவில்லை. ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டு பாட்டில்கள் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள அரசாங்கம், சவுகரியமாக சரக்கு வாங்க கூடுதல் கவுண்டர்களை திறந்துள்ளது.

(அங்கு மதுக்கடைகள் மூலம் வரும் தினசரி வருமானம் சுமார் 30 கோடி ரூபாய்).
இன்னொரு கூத்தும் அங்கு அரங்கேறியுள்ளது.
கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கான ‘லைசன்ஸ்’ வரும் 31 ஆம் தேதியுடன் முடிகிறது.
இதனால் கள்ளுக்கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அண்மையில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளுக்கடை ஏலம் நடந்துள்ளது.
ஏலம் விட்ட அதிகாரிகள் ‘மாஸ்க்’ அணிந்து ‘ஒரு தரம் ..ரெண்டு தரம்.. மூன்று தரம் ‘.. சொல்ல-
ஏலத்தில் சுமார் 200 பேர் பங்கேற்றுள்ளனர்.

அணிவதற்க்கு ‘மாஸ்க்’ கொடுத்தபோது’’ அதெல்லாம் வேண்டாம்’’ என்று கூறி, நிராகரித்து விட்டனர்.

‘’கும்பலாக கூட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கும் அரசே, பெரும் கும்பலை கூட்டி ஏலம் விடுவது, எந்த ஊர் நியாயம்? ‘’ என கேள்வி கேட்கிறார்கள், அங்குள்ள எதிர்க்கட்சி காரர்கள்.