பெருகும் குழந்தைகள் தற்கொலை. அதிர்ச்சியில் கேரள அரசு.

மார்ச் 25 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை 18 வயதிற்கும் கீழ் உள்ள 66 சிறுவர்கள் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
பிரச்சினைக்குத் தீர்வு காணக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் போன்றவற்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண்களின் மனரீதியான பாதிப்புகளுக்குக் கூடுதல் சிகிச்சைகளும், அதற்கான வசதிகளும் மாநிலத்திற்குத் தேவைப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இந்த குழந்தைகள் தற்கொலைகளைத் தடுக்க, மாநில தீயணைப்புத்துறைத் தலைவரும் ஐ.பி.எஸ்., அதிகாரியான ஸ்ரீலேகா தலைமையில் சிறப்பு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  விரைவில் இவர்களின் பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
“குழந்தைகளிடம் பழகும்போது அவர்களின் குணநலன்கள் உணர்ந்து பெற்றோர்கள் பழக வேண்டும்.  மனரீதியாக அவர்களின் ஆசைகள், எண்ணங்களை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் மனதைத் துன்புறுத்தும் வகையிலும், மனதிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகைகளிலும் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த திடீர் தற்கொலைகளுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.  ஊரடங்கினால் ஏற்பட்ட மன உளைச்சலால் நடக்கிறதா என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
– லெட்சுமி பிரியா