ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகள் பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டால் பணத்தை இழந்த பலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த விளையாட்டுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து அந்த நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்துள்ளன.

கேரளாவில் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாலி வடக்கன் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட வேண்டும். கேரளாவில் 1960 ஆம் ஆண்டின் சட்டம் உள்ளது. இதன் தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள், பார்வையாளர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், கேரள அரசு இதுபற்றி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

அதோடு, இந்த விளையாட்டின் விளம்பர தூதர்களான நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.