திருவனந்தபுரம்:கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தல் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.  இது தொடர்பான வழக்கில்  ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முக்கிய அதிகாரியுமான ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தலைமறைவாகி உள்ள நிலையில் அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது. ஸ்வப்னாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒருவரை சுங்கத்துறை கைது செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியிருந்தார். மேலும் முதல்வர் அலுவலகத்தில் ஒரு கிரிமினல் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
கடத்தல் வழக்கின் விசாரணையில் தலையிட முயன்றதாகக் கூறப்படும் விவகாரம், அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக அவர் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.