திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழைக காரணமாக கண்ணூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டமே தொடர் மழையால், வெள்ளத்தில் மிதக்கிறது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரியார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், அலுவாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயம் மழைநீரில் மூழ்கியது. மழை பாதிப்பில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீகாந்தபுரம், செங்கலை, போடிக்கலம் போன்ற இடங்களில் தாழ்வான  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஸ்ரீகாந்தபுரம் நகரில் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இடுக்கி, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வரும் 11ம் தேதி வரை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.