கோழிக்கோடு:
பிறந்த தனது குழந்தைக்கு மத நம்பிக்கையை காரணம் சொல்லி தாய்ப்பால் தரவிடாமல் தடுத்த இஸ்லாமிய கணவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள இ.எம்.எஸ். மருத்துவமனையில் கடந்த புதன் கிழமை ஹஃப்சத் என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆனால் ஹஃப்சத்தின் கணவர் அபுபக்கர், “ஐந்து முறை மசூதியில் தொழுகை முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. எங்கள் மத குரு ஹைத்ரொஸ் அலி தங்கல் அப்படித்தான் அறிவுறுத்தி உள்ளார். வேண்டுமானால் மெக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரும், சீனித்தண்ணீரும் குழந்தைக்குத் தரலாம்” என்று வற்புறுத்தினார்.

அபுபக்கர்
அபுபக்கர்

“24 மணி நேரம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தராவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு” என்று மருத்துவர்கள் எடுத்துக்கூறியும் அபுபக்கர் பிடிவாதமாக தடுத்திருக்கிறார்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற தனது மனைவி ஹஃபசத்திடம், “என் உத்தரவை மீறி தாய்ப்பால் கொடுத்தால் தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
மருத்துவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறர். இதையடுத்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீது மருத்துவமனை நிர்வாகம் புகார் கொடுத்தது.
இதையடுத்து வந்த காவலர்களிடமும், “குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் உணவு குழந்தைக்கு சென்றுவிடும்” என்று பாடம் நடத்தியிருக்கிறார்.
ஹைத்ரொஸ் அலி தங்கல்
ஹைத்ரொஸ் அலி தங்கல்

பிறகு வலுக்கட்டாயமாக தனது மனைவியை டிஸ்ஸார்ஜ் செய்து அழைத்துச் சென்றுவிட்டார். மருத்துவமனையிலிருந்து தொடர்ந்து போன் செய்தும் எடுக்கவில்லை.
அந்தக் குழந்தைக்கு மறுநாள்தான் தான் தாய்ப்பால் அளிக்கப்பட்டது  என்றும்,  அதுவரை, தந்தை அபுபக்கர் சொன்னபடி தேனும், தண்ணீரும் தான் குழந்தைக்கு அளிக்கப்பட்டன என்றும் தகவல் வெளியானது.
இதற்கிடையில் இந்த விவகாரம் கேரள மாநில குழந்தைகள் உரிமை நல ஆணையத்துக்குச் சென்றது. “மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும் அந்தத் தாய், தனது கணவர் தலாக் சொல்லிவிடுவாரோ என்று பயந்து தாய்ப்பால் தரவில்லை.  ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, தந்தை அபூபக்கர் மற்றும் மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கல் சனிக்கிழமையன்று தமராசசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்றார். அவர்கள்மீது, சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015 – ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  என்று  ஆணைய தலைவர் சோபா கோஷி, தெரிவித்தார்.
மேலும்,”பொதுவாக இஸ்லாமிய குடும்பங்களில், தண்ணீர் கொடுப்பதற்கு முன், குழந்தை ஒரு முறை தொழுகையை கேட்டால் போதும் என்ற சொல்லப்படுகிறது. ஆனால், ஐந்து முறை தொழுகையை கேட்க 24 மணி நேரம் வரை குழந்தையை தாய்ப் பாலிற்காக காத்திருக்க வைத்தது இது தான் முதல் முறை,” என்றார்.