குருவாயூர்:

மாலத்தீவு சுற்றுப்பயணம் செல்லும் வழியில் இன்று காலை குருவாயூர் வந்த பிரதமர் மோடி, அங்கு கிருஷ்ணனை தரிசித்தார். அதைத்தொடர்ந்து  அங்குள்ள புகழ்பெற்ற துலாபாரத்தில் அமர்ந்து,  தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார்.

இன்று காலை டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வந்த பிரதமர் மோடி அங்கிருந்து, கடற்படை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை குருவாயூர் சென்றடைந்தார்.

அங்கு பாரம்பரியமுறைப்படி வேட்டி துண்டு அணிந்து குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர்  கோவிலுக்கு சென்றார். கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் அம்மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். அவருக்கு கோவில் சார்பில்  பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் குருவாயூர் கோவிலுக்குள் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். சாமி தரிசனத்திற்குப் பிறகு தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கி துலாபார நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.