திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறி இருப்பதாவது: கேரளாவில் கொரோனா சமூகப் பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டதா என்று நம்மால்  சொல்ல முடியாது. ஆனால், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள், எந்த பயணமும் மேற்கொள்ளாதவர்களுக்கு அதிக தொற்று ஏற்படுகிறது.
தினமும் 200 பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. ஆகையால் நாம் சமூக பரவல் என்ற நிலையை நெருங்கிவிட்டோம். நாடு முழுவதும் முழு பொது முடக்கம் முடிவுக்கு வந்த பிறகு, வெளிநாடுகளில் இருந்து 4.1 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர்.
இதேபோல், பல மாநிலங்களில் இருந்தும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் கேரளா திரும்பியுள்ளனர். அப்படி வந்தவர்களில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட உள்ளூர் பரவலையும், இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை, கொரோனா நோயாளிகளில், 30– 50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை. இது மிகவும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.
அதனால், கொரோனா பரவல் ஆகஸ்ட், செப்டம்பரில் முடிவுக்கு வரும் என்று கூற முடியாது. ஆகையால் தான் அவசர சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளோம் என்றார்.