சென்னை:

கேரளாவைச் சேர்ந்த கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி ஆர்டிஸ்ட் பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். அப்போது, அவரின் கால்களை பிடித்து கைலுக்கி வரவேற்ற ரஜினி அவருடன் ஆசையோடு பேசினார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருகிறார். இவர் கடந்த மாதம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதி வழங்கி வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரை சந்திக்க ரஜினி அனுமதி வழங்கிய நிலையில், இன்று சென்னை வந்த பிரணவ், ரஜினியை சந்தித்து, வாழ்த்துப் பெற்றார்.

ரஜினியின் போயஸ் தோட்ட இல்லம் வந்த பிரணவை ரஜினி பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், அவரது காலை பிடித்து கைலுக்குக்கொண்டார்.  சுமார் 20நிமிடம் ரஜினியுடன் உரையாடிய பிரணவ், அவருடன் தனது கால்களைக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும், தான் காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அவரிடம் வழங்கினார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.