குன்னூர்:
கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் நக்சல்கள் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. நக்சல்கள்  அவ்வப்போது போலீஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது. நக்சலைட்டுகளை ஒடுக்க கேரள அரசு முயன்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள  நீலகிரி மாவட்டம் பந்தலூர் நிலம்பூர் அருகே உள்ள கேரள வனப்பகுதியில் போலீசார்-நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் குறித்து தமிழக எல்லைப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்ததையொட்டி, தமிழக வனத்துறையினரும், போலீசாரும் எல்லை பகுதியில் உஷாராக உள்ளனர்.
நக்சலைட்டுக்ள தமிழகத்திற்குள் ஊடுருவிவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.