கொல்லம்

சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியவரை பிடிக்க கொல்லம் ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் சவுதிக்கு சென்றுள்ளார்.

 

கொல்லம் நகரைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் சவுதி அரேபியாவில் டைல்கள் ஒட்டும் பணி செய்து வருகிறார்.    அவர் விடுமுறையில் வந்த போது அவர் நண்பரின் தம்பி மகளான 13 வயது சிறுமியைத் தொடர்ந்து 3 மாதங்கள் பலாத்காரம் செய்துள்ளார். தலித் வகுப்பைச் சேர்ந்த அந்த சிறுமி  பயத்தினால் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.  ஒரு நாள் அவர் தனது நிலையைக் குறித்து பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.

சுனில் குமார்

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து சுனில் குமார் சவுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.    அந்த பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.  கடந்த 2017 ஆம் வருடம் அந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  அதற்கு முன்பாகவே சுனில் குமாரை குடும்பத்துக்கு அறிமுகம் செய்த அந்த பெண்ணின் பெரியப்பாவும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறைக்கு புகார் அளித்த போதும் எவ்வித முன்னேற்றமும் உண்டாகவில்லை.   சமீபத்தில் கொல்லம்  காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதை கண்டார்.  அதை தொடர்ந்து இந்த வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

குற்றவாளி சுனில் குமாரைப்  பிடிக்க மெரின் ஜோசப் தனது சக  அதிகாரிகளுடன் சவுதிக்குச் சென்றுள்ளார்.   இது குறித்து மெரின், “வழக்கமாக இந்த பணிக்கு இளநிலை அதிகாரிகளை அனுப்புவது வழக்கமாகும். இவ்வாறான ஒரு வழக்கை நான் முதல்முறையாக கையாள்வதால் நானே களத்தில் இறங்கி பணிபுரிய எண்ணினேன்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை என்னால் தாங்க முடிவதில்லை.   எனவே இவ்வித குற்றங்களுக்கு முடிவு கட்ட எண்ணினேன்   அதனால் நான் நேரடியாக இந்த குற்றவாளியைக் கைது செய்ய வெளிநாடு சென்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.