கட்டாயம் உயிர் திரும்பும்.. தாயின் சடலத்தை ’காவல்’ காத்த மகள்..

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருவலச்சேரியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் கவிதாவும், அவர் தாயார் ஓமனாவும் தனியாக வசித்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயும்,மகளும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததால், உறவினர்கள், உறவைத் துண்டித்துக்கொண்டனர்.

சர்க்கரை நோய் காரணமாகக் கால் துண்டிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்த ஓமனா கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து போனார்.

அவர்கள் வசித்த வீடு ஒரு அறை மட்டுமே கொண்டதாகும்.

தீவிர மத நம்பிக்கை கொண்ட,கவிதா ,தனது தாயார் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில், ஓமனா சடலத்தை  3 நாட்களாகக் காவல் காத்து வந்திருக்கிறார்.

மனமுருகி  பிரார்த்தனையும் செய்து வந்துள்ளார்.

3 நாட்களாக ஓமனா இறந்தது யாருக்கும் தெரியாது. கவிதா பயணம் செய்யும் ஆட்டோக்காரர் மூலம் இந்த தகவல் போலீசுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஓமனா சடலத்தை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

– பா.பாரதி