கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்.தலைவர் சுகைப்

திருவனந்தபுரம்:

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதை கொலை செய்தது மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக  அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கேரளாவில்கன்னூர் மாவட்டம் மட்டனுர் பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுகைப் (வயது 29). சம்பவத்தன்று சுகைப் தனது நண்பர்களான ரியாஸ் மற்றும் நவ்சத் உடன் அருகிலுள்ள கடைக்கு சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சுகைப்-ஐ கட்சியினர்  தலசேரியில் உள்ள இந்திரா காந்தி கோ-ஆபரேடிவ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுகைப் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுகைப் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள்மீது கொலை வழக்கு, கடுமையான ஆயுதங்களால் தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கன்னூர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.