700 வகை மரங்கள் வளர்ப்பு.. வியக்க வைக்கும் கேரள இளைஞர்..
கேரள மாநில கோட்டக்கரையைச் சேர்ந்தவர் முரளீதரன்.  பிஹெச்டி பண்ணியிருக்கும் இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதாகப் பாடங்களைப் படிக்க அட்டவணை  தயாரிக்க எண்ணி உலகின் பல்வேறு நாடுகளில் விளையும் பழங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.  அப்போது தான் நம் நாட்டில் விளையும் பழங்களுடன், நமக்குத் தெரியாத ஏராளமான பழங்கள் பற்றிய தகவல்கள் இவருக்குக் கிடைத்தன. அதில் பெரும்பாலான பழங்கள் வெளிநாட்டில் மட்டும் தான் விளையும் என்று பலரும் சொல்லிய நிலையில் நம் நாட்டில் ஏன் வளர்க்க முயற்சிக்கக் கூடாது என்று தொடங்கிய முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இவரது தோட்டத்தில் 700 வகை வெளிநாட்டில் மட்டுமே வளரும்  அரிய வகை பழ மரங்களை வளர்த்துப் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
“வெளிநாட்டு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பலர்கிட்டயும் பேசினேன். அவங்க மூலமா விதைகளைச் சேகரிச்சேன். இரவு பகலா ரொம்பவே சிரமப்பட்டேன். 50 வகையான விதைகள் கிடைச்சதும், அதை எங்க தோட்டத்தில் விதைச்சு வளர்க்க ஆரம்பிச்சேன்.  எங்க வீட்டைச் சுத்தி 60 சென்ட் நிலத்துல மட்டும் சோதனை முறையில் பல்வேறு பழவகை மரங்களையும் வளர்த்தேன்.  அதில் சில செடிகள் வளரலை.  அதிகபட்சமா மூணு முறை நட்டு வெச்சதுக்குப் பிறகும் ஒரு விதையோ, செடியோ வளரலைனா, அந்தச் செடியை வளர்க்கும் எண்ணத்தை கை விட்டுடுவேன். என் ஊரின் பருவநிலையைத் தாங்கி நல்லா வளரும் செடியை மட்டும் தான் தொடர்ந்து வளர்க்கிறேன். இப்படியே கடந்த 10 வருஷத்துல வெளிநாட்டில் மட்டுமே விளையும் 700 வகை மரங்களை என் தோட்டத்தில் வளர்க்கிறேன்” என்று விளக்குகிறார் ஹரி.
இவரது தோட்டத்தில் சர்க்கரையை விடப் பல மடங்கு அதிக இனிப்புச் சுவைகொண்ட ஃப்ளாவஸ் (flavus) என்ற பழம், கதம்ஃபி (katemfe) பழமும், இனிப்புச் சுவைகொண்ட அற்புதப் பழமும் (miracle fruit), ஐஸ் க்ரீம் பீன் (Ice cream bean) பழம், ஜப்பானில் புகழ்பெற்ற சிவப்பு மாம்பழம் எனப்படும் (Egg of the sun mango) என்ற அரியவகை மாம்பழம், முழுக்கவே வெள்ளை நிறத்திலுள்ள மாம்பழம் (White Mango), பிரேசில் நாட்டின் Jaboticaba grape fruit என்ற அரியவகை திராட்சை மரம், இதய நோய் பிரச்சினைகளுக்குப் பயன்தரும் Inca peanut fruit, அமேசான் காடுகள்ல இருக்கிற 30 வகையான மரங்கள் மற்றும் ரொலினியா (Rollinia), ஸ்பானிஷ் லைம் (Spanish lime), ரம்புட்டான் (Rambutan) என்று பலவகையான அரிய மரங்களை வளர்த்துக்காட்டி சாதனை புரிந்துள்ளார்.
“இதுவரை 80 லட்சம் ரூபாய்வரை செலவு செய்திருக்கேன். 30 லட்சம் ரூபாய்வரை கிடைச்சிருக்கு. என் தோட்ட மரங்கள் வளர வளர நல்ல வருமான வாய்ப்புகள் பெருகும்” என்கிறார் வருமான வாய்ப்பு குறித்து.
“18 புதிய டெக்னாலஜி சார்ந்த கண்டுபிடிப்புகளில் வேலை செய்திருக்கேன். ஏராளமான அறிவியல் ஆய்வுகளையும் சமர்ப்பிச்சிருக்கேன். ரெண்டு புத்தகங்கள் எழுதியிருக்கேன். அப்போதெல்லாம் என்னைப் பத்தி யாருக்கும் தெரியாது. ஆனா, அரியவகை மரங்களை வளர்க்க ஆரம்பிச்சதுமே, என்னைப் பத்தி பலருக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
“என் அனுபவத்தில் நான் சொல்வது, பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து ஒரே விதமான பயிர்களைத்தான் சாகுபடி செய்றாங்க. சோதனை முறையில் கூட புதுமையான பயிர்களை விளைவிக்கிறதில்லை. புதுசா சில பயிர்களை விளைவிச்சு, அனுபவ ரீதியில் வெற்றி கிடைச்சா, அதைத் தொடர்ந்து பயிரிட்டு லாபம் ஈட்டலாம். முயற்சிகள் தவறினாலும், ஒருபோதும் முயற்சி செய்ய தவறக்கூடாது” என்கிறார் புன்னகையுடன்.
– லெட்சுமி பிரியா