லண்டன்: உண்மையான டெஸ்ட் அணி விரைவில் வருகிறது என்றும்; இதனால் இந்திய அணியினர் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சற்று நக்கலான பாணியில் கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் & டி-20 தொடர்களில் பங்கேற்கிறது.

இந்நிலையில், கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது, “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும். ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்றுள்ளார்.

பீட்டர்சனின் இந்த விமர்சனம் சர்ச்சைக்குள்ளானபோதும், இங்கிலாந்து அணி தற்போது வலுவான ஒரு அணியாகவே உள்ளது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது.