ஆண்டுக்கு 2லட்சம் பேரின் சிறுநீரகம் செயலிழப்பு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
டில்லி:
ஒரு ஆண்டில் சுமார் 2லட்சம் பேருக்கு சிறுநீரம் செயலிழந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளது.
சமீப காலமாக மக்களின் வாழ்க்கை முறை மாறி வரும் நிலையில், நோய்நொடிகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதுப்புது நோய்களும் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, ஆண்டிற்கு 2 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது.
மேலும், சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்தும் வகையில், தேவையான சிறுநீரகங்கள் கிடைப்பதில்லை என்றும், வெறும் 10ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே ஆண்டொன்றுக்கு கிடைப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
மனிதனின் உடல்நலத்தைப் பிரதிபலிக்கும் உறுப்புக்களில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாக நமது மக்களை ஆக்கிரமித்து வரும் சர்க்கரை நோயும் சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
நமது உடலில் உள்ள நீர்ச்சத்தில் காணப்படுகிற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்கிற சிறுநீரகம் பழுது அடைய தொடங்கும்போது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் அல்லது தேவையான அளவிற்கு வெளியேறாமல் சிறுநீர்ப் பையில் (Urinary Blader) தங்கிவிடும். இதுபோன்ற காரணங்களால் சிறுநீரகம் செயலிழந்து வருகிறது.