ரியலூர், தூத்துக்குடி

நேற்று முன் தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவசந்திரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் மரணம் அடைந்துள்ளனர். அவர்களின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சவரைப்பேரி கிராமத்தில் சுப்ரமணியன் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ், கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி. முரளிராம்பா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு சுப்ரணியன் உடல் சவரைப்பேரி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியதையுடன் சுப்ரமணியன் உடல் தகனம் செய்யப்பட்டது. சுப்ரமணியன் மரணத்தால் சவரைப்பேரி கீராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சிஆர்பி எஃப் படைவீரராக சேர்ந்த சிவசந்திரன் எம் ஏ பி எட் படித்துள்ளார். வீர மரணம் அடைந்த சிவசந்திரன் உடலுக்கு அரியலூர் மாவட்டம் கார்குடியில் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை கார்குடி கிராமத்திற்கு பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்து சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கார்குடியில் சிவசந்திரன் வீட்ட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.