கோலாலம்பூர்:

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 112 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி அங்கு ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

92 வயது நிரம்பிய மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். மகாதிர் முகமது ஆட்சி அமைக்க மன்னரின் அரண்மனையில் இருந்து அழைப்பு வராமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது மகாதிர் ஆட்சி அமைக்க மன்னர் சுல்தான் முகமது அழைப்பு விடுத்துள்ளார். இன்று இரவு 9.30 மணிக்கு மகாதிர் மலேசியாவில் 7வது பிரதமராக பதவி ஏற்கிறார். இவரை பதவி ஏற்க அழைப்பு விடுப்பதில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அரண்மனை வட்டாரம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.