நாகர்கோவில்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து,  குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக, மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் , தலித் இளம்பெண் ஒருவர் 4 ஆதிக்க சாதி ஆண்களால்  கூட்டு பாலியல் வல்லுறவால் செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர்களான  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அங்கு செல்ல முயன்ற நிலையில், மாநில எல்லையில், உத்தரபிரதேச காவல்துறையினர் அடாவடி செய்து, அவர்களை சாலையில் தள்ளினர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ வெளியாகி நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு உ.பி. அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக பயணம் செய்த ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி த ஹத்ராஸ் கிராமத்துக்கு சென்று, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்பின்போது,  கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையான முறையில், உடல் முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டு, அவரது நாக்கும் கடித்து துண்டாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜக அரசின் மெத்தமான நடவடிக்கையே என நாடு முழுவதும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், தமிழக பாரதியஜனதா கட்சியோ, எல்லாவற்றுக்கும் மேலாக முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல, ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக குமரி மாவட்ட பாரதியஜனதா கட்சி சார்பில், அங்கு பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில்,

உத்தரபிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால்  கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்  செல்வி.மணிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போடப்பட்டுள்ளது.

மாவட்ட பாஜகவின் இந்த அடாவடி செயல்,  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மீது அவதூறு பரப்பும்  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை யை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துஉள்ளது.

இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில்,  குமரி மாவட்ட பாஜகவினர் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்றும்,  இது காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை எற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே,  இதுபோன்ற வதந்திகளை பரபப்பும் சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் இன்று கொடுக்கப்பட்ட புகார் மனுவின் நகல்.