கான்பெரா: டேவிட் வார்னரின் காயம் நீண்ட நாட்களுக்கு இருந்தால், எங்கள் அணிக்கு நல்லது என்று இந்திய அணியின் கேஎல் ராகுல் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, டேவிட் வார்னர் காயமடைந்தார். இதனையடுத்து, டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கும் வகையில், மூன்றாவது ஒருநாள் போட்டி & டி-20 தொடரிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த காயம் குறித்து கேஎல் ராகுலிடம் கேட்கப்பட்டபோது, “வார்னருடைய காயத்தின் தன்மை குறித்து எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனால் இப்படியாக, ஒரு வீரருக்கு நேரக்கூடாது.

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் வார்னர். அதேசமயம், அவரின் காயம் நீண்ட நாட்கள் நீடித்தால், அது எங்கள் அணிக்கு நல்லது” என்றார்.

இவரின் இந்தக் கருத்துதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இப்படி பேசுவதுதான் விளையாட்டு உணர்வா? மற்றும் ஒரு விளையாட்டு வீரருக்கு அழகா? என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.