டாக்கா: வங்கதேசம் குறித்த இந்திய உள்துறை அமைச்சரின் அறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமென்.

பல துறைகளில், இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வங்கசேதம் நல்ல வளர்ச்சியடைந்திருப்பதாய் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது சொந்த நாட்டில், வங்கதேச ஏழைகள், 3 வேளை உணவுக்கு வழியில்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். எனவே, மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால், வங்கதேசத்தினரின் ஊடுருவல் தடுக்கப்படும் என்று பேசியிருந்தார் அமித்ஷா.

இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென். அவர் பேசியுள்ளதாவது, “வங்கதேசம் பல விஷயங்களில் இந்தியாவைவிட மேம்பட்டுள்ளது. இந்த உலகில் சில அறிவார்ந்த மனிதர்கள் பார்த்தும் தெரிந்துகொள்வதில்லை; அறிந்தும் புரிந்துகொள்வதில்லை.

அமித்ஷா, வங்கதேசம் குறித்து கூறியுள்ள கருத்துகள், அவருக்கு எங்கள் நாட்டைப் பற்றிய அறிவு மிகவும் குறுகியது என்பதைக் காட்டுகிறத. எங்கள் நாட்டில் யாரும் பட்டினியால் இறக்கவில்லை. வங்கதேசத்தில், 90% மக்கள், சுகாதாரமான கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம், இந்தியாவிலோ, 50%க்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை” என்று சாடியுள்ளார்.