கனமழை காரணமாக மூடப்பட்ட கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. மேலும், சுற்றுலாத்தலங்கள் உள்ள பகுதிகளில் போதிய பாதுகாப்பு குறித்தும் வனத்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டதால், இன்று காலை மீண்டும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குனா குகை, துண் பாறை, பேரிஜம் ஏரி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் எவ்வித நிபந்தனையுமின்றி அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.