உதகை:

கொடநாடு கொலை, கொள்ளை  விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள கேரளாவை சேர்ந்த சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் ஊட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

இந்த வழக்கில், ஆஜராக உதகை நீதிமன்றத்தில், சயன், மனோஜ்க்கு கொடுக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதி மன்றம், வரும் 29ந்தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இதை எதிர்த்து,  இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதி மன்றம், இருவரும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இந்த நிலையில், இருவரும் இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு ஒரு பார்வை….

மறைந்த தமிழக முன்னாள் முதல்வருக்கு பிடித்தமான பங்களாக்களில் முதன்மையான கொடநாடு எஸ்டேட் பங்களா. இங்கு அவ்வப்போது ஓய்வுக்காக ஜெயலலிதா வருவது வழக்கம். அதுபோல மருத்துவ சிகிச்சையின்போதும், இங்கு தங்கிதான் சிகிச்சை பெற்று வந்தார். அதன் காரணமாக தலைமை செயலகமே சில நாட்கள் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்றது உண்டு.

இந்த கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மறைவை தொடர்ந்த, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இந்த கொள்ளையில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். 2வது குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில், தெஹல்கா ஆசிரியரின் ஆவனப்படத்தில் கொடநாடு கொலை, கொள்ளையில், முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. முதல்வர் மீது பழி போட்டதால் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது. மேலும் கொடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகும் உத்தரவை எதிர்த்து சயன், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.  ஆனால், நீதி மன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று உதகை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

வழக்கு விசாரணையை தொர்ந்து,  ஜாமினை ரத்து செய்யக்கோரும் போலீஸ் மனு மீதான விசாரணை பிப்.2க்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.