மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ சதமடித்த தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானேவை பாராட்டியுள்ளார் நிரந்தர கேப்டன் விராத் கோலி.

ஏனெனில், கடந்த 1999ம் ஆண்டு இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது, அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் சதமடித்தார். அதன்பிறகு, அந்த மைதானத்தில் இந்தியக் கேப்டன்கள் யாரும் சதமடிக்கவில்லை.

ஆனால், 21 ஆண்டுகள் கழித்து, ஒரு இந்தியக் கேப்டனாக சதமடித்து அசத்தியுள்ளார் அஜின்கியா ரஹானே. மேலும், வெளிநாடுகளில், டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 5வது இந்தியக் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் இவர்.

இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், அசாருதீன், செளரவ் கங்குலி மற்றும் விராத் கோலி ஆகியோர் சதமடித்துள்ளனர். மேலும், கடந்த 2004ம் ஆண்டிற்குப் பிறகு, மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்த வெளிநாட்டு கேப்டன் என்ற பெயரும் ரஹானேவுக்கு கிடைத்துள்ளது.