கொச்சின்: கொல்கத்தா அணிக்கு தோனி, ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி போன்று நல்ல கேப்டன் தேவை என்று பேசியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
கொல்கத்தா அணி, இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும்கூட, அணியின் செயல்பாடு என்று வருகையில் மோசமில்லை.
இந்நிலையில், இவரை கவாஸ்கரும் ஸ்ரீசாந்தும் தேவையின்றி வம்பிழுத்துள்ளனர். கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மார்கனுக்கு கொடுக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் கூறியுள்ளதாவது, “கொல்கத்தா அணியை இயான் மோர்கன் வழிநடத்த வேண்டும்; தினேஷ் கார்த்திக் அல்ல. கொல்கத்தா அணி நிர்வாகம் இப்பிரச்சினையை சரிசெய்யும் என்று நம்புகிறேன். அந்த அணிக்கு, தோனி, கோலி மற்றும் ரோகித் போல், நல்ல கேப்டன் அமைய வேண்டும்” என்றுள்ளார்.