அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது.

முதன்முதலாக பெங்கால் அணியும் டெல்லி அணியும் இறுதிப் போட்டியில் மோதிய நி‍லையில், கொல்கத்தா அணி 39-34 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இப்போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளுமே 17-17 என்று புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றன. ஆனால், இரண்டாவது பாதி ஆட்டம் வேறுமாதிரி சென்றது. இரு அணிகளும் நீயா நானா? பலப்பரீட்சை நடத்தின.

ஆனால், பெங்கால் அணியின் ரவீந்திர ரமேஷ் மற்றும் முகமது ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி முன்னிலைப் பெறத் தொடங்கியது. கொல்கத்தா அணி மொத்தம் 25 புள்ளிகளை எட்டியவுடன், அந்த அணியின் வேகம் இன்னும் அதிகரித்தது.

இறுதியில் டெல்லி வீரர்களால் எதையும் செய்ய முடியவில்லை. இரண்டாமிடத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. கொல்கத்தா அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசுத் தொகையும், டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் வழங்கப்பட்டது.