திருவனந்தபுரம்:
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பரவிய  கொரோனா  வைரஸ் தொற்று கேரள மாநிலம்  வயநாடு வரை பரவி உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக இருந்தது தெரிய வந்துள்ளது.  கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள், அங்கு காய்கறி வாங்கச் சென்றவர்கள் என யாரும் சமூக விலகலை கடைபிடிக்காத நிலையிலும், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததாலும், ஆயிரக்கணக்கானோருக்கு பரவி உள்ளது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட் மூடிப்பட்டுள்ள நிலையில், அங்கு கடைகள் நடத்திய வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,  கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிச்சென்ற  கேரளா வயநாடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், கிளீனருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. லாரி ஓட்டுனரின் தாயார், மனைவி மற்றும் கிளீனரின் மகன் உள்பட  4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது.