சென்னை: கொரோனா வைரல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று  ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது.
ஒரு வாரத்தில் மட்டும் 1154 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது.  அதன் காரணமாக கருதப்படுவது சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை  ஆகும். இதன் மூலமாக தான் தற்போது அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது. திருமழிசையில் வரும் 7ம் தேதி முதல் தற்காலிகமாக காய்கறி சந்தை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. பொது மக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.