தினகரன் – கிருஷ்ணப்பிரியா

“சனி பெயர்ச்சி யாருக்கு என்ன செய்கிறதோ இல்லையோ.. சசிகலா குடும்பத்தில் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது” என்கிறார்கள் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரத்தினர்.

இதற்குக் காரணம், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெளியிட்ட ஜெ. வீடியோவும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும்தான்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.  தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ தமிழக அரசியல் களத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  வெற்றிவேல்மீது 126 வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சியினர் தினகரனை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலா குடும்பத்துக்குக்குள்ளும் குதர்க்கம் வெடித்திருப்பது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது.

சசகலாவுடன் சிறையில் இருக்கும் அவரது உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, “வெற்றிவேல் செய்தது துரோகம்” என்று காட்டமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். மேலும், “சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஜெயலலிதாவுக்கு கழுத்தைத் திருப்ப முடியவில்லை. ஆகவே வீடியோ எடுக்கச் சொன்னார். சசிகலாதான் வீடியோவை எடுத்தார்.

ஆணையத்தில் கொடுப்பதற்காக அந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் அது எப்படி வெற்றிவேலிடம் சென்றது.. அவர் மீது தினகரன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..” என்றும் கேட்டிருந்தார் கிருஷ்ணப்பிரியா.

ஆனால் அவரது உண்மையான கோபம், தினகரன் மீதுதான். தன்னை அறியாமலேயே அதை வெளிப்டுத்திவிட்டார்.

கிருஷ்ணப்பிரியா வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதற்குத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

முதலில், “டி.டி.வி.யின் செயல் கீழ்த்தரமானது” என்று நேரடியாக தினகரனை தாக்கித்தான் பதிவிட்டிருந்தார். அதன் பிறகுதான், ‘டி.டி.வி.தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் செயல் கீழ்த்தரமானது’ என்று மாற்றியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் இருக்கும் ‘Edit History”  வசதி, இதைக் காட்டிக்கொடுத்துவிட்டது.

தினகரன் ஆதரவாளர்கள் இதைக் கவனித்து, கிருஷ்ணப்பிரியாவுக்கு எதிராக பின்னூட்டங்கள் இட்டனர். இதையடுத்து  அந்தப் பதிவையே அழித்துவிட்டு புதிதாக பதிந்தார் கிருஷ்ணப்பிரியா.

ஆக சசிகலா குடும்பத்துக்குள் உட்குடும்ப பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது வெளிப்பட்டியிருக்கிறது.