நாகர்கோவில்,

ன்னியாகுமாரி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 3 மீனவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் நீந்தி கரை சேர்ந்தார்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார். மாயமான மற்ற இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் பெஞ்சமின் மற்றும் தாசன் ஆகியோரது உடல்கள் குளச்சல் பகுதியில் கரை ஒதுங்கியது. அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.