சென்னை:
குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.

கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, தமிழ், மலையாளம், தெலுகு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடிகர் மாதவன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. நடிகை மற்றும் பா.ஜ.கவின் வேட்பாளரான குஷ்புவின் கணவரான இவர், குஷ்புவுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், நன்றாக இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அவர், விரைவில் குணமடைய பிரார்தனை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.