குவைத்

வெளிநாட்டில் இருந்து வரும் 30 வயதுக்கு குறைந்த பட்டயதாரர்களுக்கு (டிப்ளமோ படிப்பு) வேலைவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தகவல் வந்துள்ளது.

குவைத் நாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இங்கு பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்புகள் படித்த உடன் கிடைத்து வருகின்றது.

இதை ஆராய்ந்த குவைத் நாட்டின் மனிதச் சக்தி மேம்பாட்டு மையம், முன் அனுபவம் ஏதுமின்றி பலர் இங்கு பணி புரிய வந்துள்ளதை தடுத்துள்ளது.   அதன்படி 30 வயதுக்கு குறைந்த டிப்ளமோ பெற்றவர்களுக்கு வரும் 2018 முதல் பணி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.   அதே நேரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட பட்டயதாரிகள் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்த விரும்பினால் பணியை ராஜினாமா செய்து விட்ட் நாட்டை விட்டு வெளியேறிய வேண்டும் எனவும் அதன் பிறகே மேல் கல்வியை தொடர வேண்டும் எனவும் கூறி உள்ளது.

இதுவரை குவைத் அரசு மட்டும் வேலை வாய்ப்புக்கு 2274 ஒப்பந்தங்கள் போட்டு, சுமார் 4,47,077 பேர் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.  அதனால் அரசு புதிய ஒப்பந்தங்கள் போடுவதையும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை வெளிநாட்டில் இருந்து வேலைக்கு அமர்த்துவதையும் குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.