இந்தூர்,

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை  இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி மட்டையை பிடித்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார்கள்.  பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 50 ரன்னுடனும், ஸ்டாய்னிஸ் 29 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓவர் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை அணி களமிறங்கியது.

மும்பை அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக  களமிறங்கினர். எவின் லீவீஸ் 10(13) ரன்கள் எடுத்திருந்த போது ரஹ்மான் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

டுத்து ஆட வந்த இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி, 34 பந்துகளில்  அரை சதத்தை பதிவு செய்தார்.

இதற்கிடையில் அதிரடியாக  ஆடி வந்த யாதவ் 57  ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டாய்னிஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆக,தொடர்ந்து இஷான் கிஷான் 25  ரன்களில் ரஹ்மான் பந்தில் கேட்ச் மூலம் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக ஆட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதன் காரணமாக ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது. ஆனால், அவரும்  23  ரன்களில் டை பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குர்னால் பாண்ட்யா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றது. இறுதியில். மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டும், அண்ட்ரூ டை மற்றும்  ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை  இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.