டில்லி

தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.   இந்த வங்கிக்கு இந்தியாவில் 19 மாநிலங்களிலும் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் கிளைகள் உள்ளன.    மொத்தம் இந்த வங்கிக்கு 566 கிளைகளும் 918 ஏடிஎம் களும் உள்ளன.  இந்த வங்கி சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி வந்தது.

அதன் பிறகு இந்த வங்கியில் பெரிய நிறுவனங்களும் கடன் பெறத் தொடங்கின.  அப்போதிருந்து வங்கிக்கு வாராக்கடன் அதிகரித்தது.   2017 ஆம் வருடத்தில் வாராக்கடன்கள் 2.67% ஆக இருந்தன.  ஆனால் 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் இது 26.39% ஆக அதிகரித்தது.   வங்கியின் வைப்புத் தொகை 31,000 கோடியில் இருந்து 21,000 கோடியாகச் சரிந்தது.

இதையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் லட்சுமி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி பி சி ஏ திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் வந்ததால் இந்த வங்கியால் ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி பெரிய கடன்களை அளிக்கவோ பெரிய அளவில் வைப்புத் தொகையைப் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது.   மேலும் அப்போது வைப்புநிதி மோசடி வழக்கு ஒன்று பதியப்பட்டு வங்கி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு தற்போது மத்திய நிதித்துறை இயக்க தடை விதித்துள்ளது.   இந்த வங்கியின் சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் ரூ.25000க்கு மேல் எடுக்க முடியாது.   ஒருவருக்கே பல கணக்குகள் இருந்தால் மொத்தம் சேர்த்து ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும்.

லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள், பண முறிவுகள் போன்றவற்றுக்குப் பணம் அளிக்கப்பட மாட்டாது.  அத்துடன் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது.  அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது.   ஏற்கனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது.