ராஞ்சி:

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கும்  ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் டில்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க டில்லி அழைத்து வரப்பட்டுள்ளார்.

மாட்டுத்தீவனம் தொடர்பான 4 வழக்குகளிலும் லாலு குற்றவாளி என ராஞ்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறையில் உள்ள அவருக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலச்சிக்கல் கோளாறால் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து,ரெயில் மூலம் அழைத்து செல்லப்பட்ட லாலு பிரசாத் யாதவ் டில்லி வந்தடைந்துள்ளார். அங்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.