சென்னை:

சென்னை அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளரான சிவப்பிரியா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரனை பகுதியில் உள்ள  ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள  நிலத்தை  20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்து  அபரிக்க உதவி செய்த புகாரின் பேரில் சார்பதிவாளர் சிவப்பிரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிக்கரணை காமகோடி நகரில்  சொக்கலிங்கம் என்பவருக்கு சொந்தமான 3350 சதுர அடி அளவுள்ள காலி இடம் இருந்தது. இதற்கிடையில் கடந்த  1995-ம் ஆண்டு சொக்கலிங்கம் இறந்துவிட்டார்.

இதையறிந்த சிலர், அந்த நிலத்துக்கு போலி ஆவனம் தயாரித்து,  ஜீவன் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி என்பவருக்கு,  சொக்கலிங்கம்  எழுதி கொடுத்ததாக, போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரான சொக்கலிங்கம் குடும்பத்தினர் கொடுத்த புகாரை ஆய்வு செய்த போலீசார்,  ரூ.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலியாக ஆவணத்தை உருவாக்கி, அந்த நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் சிவப்பிரியாக உதவியது தெரியவந்தது.

இதன் காரணமாக  சிவப்பிரியா கைது செய்யப்பட்டார். இவர் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து ரூ. ஒன்றரை கோடி  மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.