திருக்கழுக்குன்றம்: நிலத்தகராறில் கோவில் அருகே  இருந்த நிலத்தில் உருவாகியிருந்த புற்றை  நில உரிமையாளர் இடித்த  நிலையில், அதனுள் இருந்த நல்லம்பாபு சீறியது. இதனால்,  பொதுமக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

திருக்கழுக்குன்றம் மாவட்டம்  சங்கு மேட்டு தெருவில் 75 வருடம் பழமையான தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் பின்புறம் சுயம்புவாக உருவான பாம்பு புற்று உருவானதாக கூறப்படுகிறது. இந்த புற்று வளர்ந்த இடம், செந்தில் என்பவருக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் புற்றுக்கு பால், முட்டை கொடுத்து வழிபடுவதால், தனது இடம் பறிபோய் விடும் என்ற பயத்தில், அவர், புற்றை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து,  ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, அந்த பாம்பு புற்றை இடித்தார். இதில், அதனுள் குடியிருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. இருந்தாலும் ஜேசிபியின் தாக்குதலில் சிறிது நேரத்தில் அந்த பாம்பு பலியானது. மேலும், அதனுள் இருந்த மூன்று நல்ல பாம்புகள் தப்பியோடி உயிர் பிழைத்தன.

இந்த சம்பவம் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலர் பக்தி பரவசத்தில் நாகம்மா என கூச்சலிட்டனர். இதுகுறித்த தகவல் வனத்துறைக்கு சென்றது.  விரைந்து வந்த  வனத்துறையினர் வந்து விசாரித்தபோது, அங்கு குவிந்த பொதுமக்கள்  பாம்புப் புற்றை இடித்தவர்களை கைது செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, நில உரிமையாளர் செந்தில்ஜேசிபி ஓட்டுநர் ஜெய்சங்கர் இருவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். புற்றை உடைக்க பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் கைது கைது செய்யப்பட்டு வேட்டையாடுதல், வனவிலங்குகளுக்கு ஊறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில், ஜெய்சங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில்,  கோயிலின் பின்புறம் உள்ள  கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செந்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துள்ளதாக கூறப்படுகிறது.