ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவால், 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது. இச்சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஆல்டா நகரில் ஜூன் 5ம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு 650 மீட்டர் முதல் 800 மீட்டர் அகலமும், 40 மீட்டர் உயரமும் கொண்டதாக பதிவாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொள்ளும் ஆபத்திலிருந்து உடனே தப்பி, அருகிலுள்ள மலைப் பகுதிக்கு தப்பி ஓடிய ஜான் எகில் பக்கெடால் என்பவர், நிலச்சரிவை படம் பிடித்துள்ளார். அதில், வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும், நாய் ஒன்றும் நிலச்சரிவில் கடலுக்குள் மூழ்கின. அதிர்ஷ்டவசமாக நாய் கடலில் நீந்தி உயிர் பிழைத்தது. வேறு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர் நார்வே நாட்டு காவல்துறையினர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே, அருகில் இருந்த வீடுகளில் வசித்த மக்கள், வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.