மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், சூர்யகுமார் சேர்க்கப்படாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா.

ஐபிஎல் தொடரில், மும்பை அணியில் இடம்பெற்று, சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து, ஏற்கனவே ஹர்பஜன்சிங் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லாரா கூறியுள்ளதாவது, “சூர்யகுமாரிடம் எந்தக் குறைபாடும் இல்லை. அவர், இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். சமீபத்தில் ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

அதிக ரன்கள் அடித்தார் என்ற அடிப்படையில் மட்டுமின்றி, இவரின் பேட்டிங் நுட்பம் மற்றும் நெருக்கடியைக் கையாண்ட விதம் ஆகியவற்றுக்காகவும் இவர் சிறந்தவர் என்று கருதுகிறேன்.

ஒரு அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதென்பது சாதாரண ஒன்றல்ல. சிறந்தவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். எனவே, சூர்யகுமார் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்” என்றுள்ளார் லாரா.