ர்மபுரி

ர்மபுரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியால் தத்து எடுக்கப்பட்ட மொக்கன்குறிச்சி கிராமத்தின் நிலை பற்றிய தி ஃபெடரல் ஆங்கில செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் கட்டுரையில் காணப்படுவதாவது :

கடந்த 80 களில் வன்னியர் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததால் கடந்த 1988 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தர்மபுரி மாவட்டம் மொட்டன்குறிச்சி கிராமத்தில் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு வன்னியர் சமுதாயத்தினருக்காக பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. முதலில் வன்னியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த கட்சி மெல்ல மற்ற இனத்தவரையும் அரவணைத்துக் கொண்டது. அத்துடன் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தக் கட்சியின் தலைவர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் கூட்டணி இன்றி தனித்து நின்ற பாமக 5% வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தகக்து.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வின் தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அவர் மொட்டன்குறிச்சி கிராமத்தை மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா என்னும் அரசு திட்டத்தின் கீழ் தத்து எடுத்துக் கொண்டார்.

அன்புமணி இந்த கிராமத்தை தத்து எடுத்த போது இங்கு ஸ்மார்ட் பள்ளிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏராளமானவற்றை செய்து இதை ஒரு மாதிரி கிராமமாக மாற்றப்படும் என உறுதி அளித்திருந்தார். தற்போது இந்த கிராமத்தின் நிலை குறித்து அறிய தி ஃபெடரல் ஊடக செய்தியாளர்கள் மொட்டன்குறிச்சிக்கு சென்றுள்ளனர்.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பெண் செய்தியாளர் ஒருவரை அன்புமணியின் சகோதரி மகள் என மக்கள் கருதி உள்ளனர். அதனால் இந்த கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசவே மக்கள் விரும்பவில்லை.

அதன் பிறகு உண்மையை தெரிந்துக் கொண்ட பிறகு அந்த கிராமத்து விவசாயி ஒருவர், “பாட்டாளி மக்கள் கட்சி அரசியலுக்கு வந்ததும் எங்கள் சமுதாயத்துக்கு ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி ஆகியோர் நன்மை செய்வார்கள் என எண்ணினோம். அதனால் 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் அன்புமணியை வெற்றி பெறச் செய்தோம். அதன் பிறகு அவர் எங்கள் கிராமத்தை தத்து எடுத்துக் கொண்டார்.  அத்துடன் அனைத்து வசதிகளையும் அளித்து மாதிரி கிராமமாக அமைப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இந்த ஊரில் இரண்டு எல் ஈ டி தெரு விளக்குகள் அமைத்ததைத் தவிர வேறெதுவும் அவ்ர் செய்யவில்லை. அவர் வாக்குறுதி அளித்த குடிநீர் திட்டத்தில் எந்த ஒரு சிறு பணியும் நடைபெறவில்லை. எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் ஒரு துளி குடிநீர் கூட இல்லை. அப்படி இருக்க நாங்கள் அவருக்கு திரும்ப ஏன் வாக்களிக்க வேண்டும்?” என கேட்டுள்ளார்.

அந்த ஊர் கோவில் கூடி இருந்த இளைஞர்கள், “அன்புமணி எங்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக வாக்களித்தார். ஆனால் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. ஒவ்வொரு வருடம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார். அதுவும் நடத்தவில்லை.

தற்போது நாங்கள் தர்மபுரி நகரில் தினக்கூலிகளாக பணி புரிகிறோம். அதனால் நாங்கள் தமிழக மின் வாரியத்தில் ரூ.15000 மாத ஊதியப் பணிக்கு விண்ணப்பித்துள்ளோம். அது கிடைத்தால் இந்த கிராமத்தை விட்டு வெளியேற உள்ளோம்.” என தெரிவித்துள்ளனர்.

கடந்த 1988 ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவரில் ஒருவரான சுப்ரமணியின் மகன் நஞ்சன், “எனது தந்தை தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். அவர் துப்பாக்கி சூட்டில் இறந்ததால் எங்கள் குடும்பத்துக்கு திமுக அரசு மாதம் ரூ.2000 உதவித் தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் தந்தை உள்ளிடோருக்கு வன்னியர் சங்க போராட்ட ட்யாகிகள் என பட்டம் அளித்துள்ளது. அது மட்டுமின்றி வருடத்துக்கு எங்கள் குடும்பத்துக்கு ரூ.10000 உதவித் தொகை அளித்து வருகிறது.

நான் எனக்கு வேலை வாய்ப்புக் கோரி அன்புமணியை பலமுறை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். அவர் ஒவ்வொரு முறையும் உறுதி அளித்தும் இது வரை அது நடக்கவில்லை” என தெரிவித்துளார்.