ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தடையை மீறி நடத்தப்படும், பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என  தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது,

“தமிழக அரசின் நடவடிக்கையால்  மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.  தினசரி  2,500க்கும் குறைவான நபர்களுக்கே தொற்று பரவல் இருதந்து வருகிறது. இது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவு. அரசின் பல்வேறு துறைகளின் முயற்சியால் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது. தொற்று  பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில்  விதிக்கப்பட்டதன் கட்டுப்பாடுகள்தான். அதன் பலன் இன்று கிடைத்திருக்கிறது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து 9 ஆம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும்”.

மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

மலை மாவட்டங்களில் நில அமைப்பு காரணமாக நோய்ப் பரவல் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், சுற்றுலாத் தலங்களைத் திறக்க வாய்ப்பில்லை.

நீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவத் தேவைக்காக ‘ஏர் ஆம்புலன்ஸ்’ சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, அவரிடம் செய்தியளார்கள், தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கியிருப்பது குறித்து  கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,   ”சட்டம் தன் கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்தார்.