சென்னை,

திருமண மண்டபம் கட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞரை கராத்தே பாணியில் தாக்கியதால், வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. இதன் காரணமாக சந்தானம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

100கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக வலம்வந்த  நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வளவசரவாக்கத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார்.

இந்த கட்டிடத்தை கட்ட இன்னோவேடிவ் கன்ஸ்டரக்ஷன் என்ற நிறுவனத்திடம் காண்டிராக் கொடுத்து, இதுவரை ரூ.3 கோடி அளவுக்கு பணமும் கொடுத்துள்ளார்.

ஆனால், திட்டமிட்டபடி திருமண மண்டபம் கட்டி கொடுக்காமல் 3 வருடமாக இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளார். இது குறித்து இருவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த நிறுவனம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து வந்துள்ளது.

மீதி பணத்தை கேட்க வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேடிவ் நிறுவனத்துக்கு நேற்று சென்ற சந்தானம், அந்த நிறுவனத்தின் இயக்குனருடன் பணம் குறித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் நிறுவனத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் குறுக்கே வந்து பேசியுள்ளார். இதன் காரணமாக சந்தானத்துக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே தகராறு முற்றியது.

இதன் காரணமாக இருவரும் தகராறு செய்துகொண்டே நிறுவனத்தை விட்டு வெளியே தெருவுக்கு வந்தனர். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சந்தானம் வக்கீலின் மூக்கு மற்றும் முகத்துவில் தாக்கினார்.

நடிகர் சந்தானத்துக்கு கராத்தே தெரியும். அதன் காரணமாக அவர் கராத்தே பாணியில் தாக்குதல் நடத்தியதால்,  வழக்கறிஞரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து உடனடியாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து  பிரேம் ஆனந்த்  சிகிச்சைக்காக விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சந்தானம் தனக்கும் காயம் உள்ளதாக கூறி சூர்யா மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர். அதன் காரணமாக பா.ஜ.வினர் காவல் நிலையத்தில் திரண்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சனையில் பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை தாக்கியதாக சந்தானம் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.