டில்லி

ரஃபேல், அயோத்தி மற்றும் சிபிஐ வழக்குத் தீர்ப்புகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற அளிக்கப்பட்டதா என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரபல சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் தனது டிவிட்டரில், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அவசரநிலை பிறப்பிக்கப்படாமல் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்கும் தெரியவரும்” என பதிந்திருந்தார்.

பிரசாந்த் பூஷன்

இதையொட்டி உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷன் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.   இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையில் பிரசாந்த் பூஷன் சார்பாகப் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார்.

துஷ்யந்த தவே தனது வாதத்தில், “பல முக்கிய வழகுகளின் தீர்ப்பில் அளிக்கப்பட்ட பல தீர்ப்புகள் நீதிக்கு எதிராக உள்ளதாகப் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்புகள் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட பல நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது.   இவர் அளித்த தீர்ப்புக்களில் ரஃபேல், அயோத்தி, சிபிஐ அதிகாரம் குறித்த வழக்குகளில் தீர்ப்புக்களில் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக புகார் எழுந்தது.

 

துஷ்யந்த் தவே

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட்டு அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் மக்கள் கோகாய் இந்த பதவியைப் பெற அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தாரா எனச் சந்தேகத்தில் உள்ளனர்.   இது நீதித்துறைக்குச் சரியாகுமா??

ரஞ்சன் கோகாய்

அது மட்டும் அல்ல.  குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டும் இது போன்ற முக்கியத்துவம் உள்ள வழக்குகள் ஒதுக்கப்படுவது ஏன்?  உதாரணமாக நீதிபதி நாரிமனுக்கு ஏன் இவ்வித வழக்குகள் அளிக்கப்படுவதில்லை? “ எனக் கேள்விகள் எழுப்பினார்.  அதற்கு அமர்வில் இருந்த நீதிபதி  கவாய் , “பல அர்சியலமைபு அமர்வு வழக்குகளில் நாரிமன் இடம் பெற்றிருந்தர் எனக் கூறினார்.

அதற்கு தவே, “நான் கேட்டது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறித்ததாகும்.  நான் இது போல் 50க்கும் மேற்பட வழக்குகளைப் பட்டியலிடுவேன்.   உங்களைப் போல் நீதிபதிகள் நாட்டின்130 கோடி மக்களுக்கும் பெற்றோர் ஆவீர்கள்.  நமது அரசியல் வாதிகளைப் பற்றி நாம் அறிவோம். எனவே குடிமக்களின் உரிமையைப்  பாதுகாப்பது  உச்சநீதிமன்றத்தின் கடமையாகும்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான பிரசாந்த் பூஷன் தாம் நீதிமன்றத்துக்கு எவ்வித அவமதிப்பும் செய்யவில்லை எனத் தெளிவாகக் கூறி உள்ளார்.   அவர் ஏற்கனவே பல வழக்குகளில் இந்திய நீதித்துறைக்கு பெரும் பங்காற்றி உள்ளார். எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் உத்தரவை விசாரணை முழுவதுமாக முடிந்த பிறகு அளிப்பதாக ஒத்தி வைத்துள்ளது.