முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி..

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தார்.

அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசினர்.

காவிரி டெல்டா விவசாயிகள் பலன் பெறும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதற்காக விவசாயிகள், முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

வேளாண்மை தொழிலாளர்கள் நலன் குறித்து கோரிக்கை மனுவும் அளித்தனர்

எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தவர்களில்,.தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் சங்கத்தின் மாநில   தலைவர் புலியூர் நாகராஜனும் ஒருவர்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள விவசாயிகளுக்கு, கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் இலவச ‘மாஸ்க்’ வழங்க வேண்டும் என அப்போது முதல்வரிடம், நாகராஜன் வலியுறுத்தினார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக  நாகராஜன் நேற்று முன் தினம் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நாகராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நாகராஜன் நேற்று உயிர் இழந்தார். அவருக்கு வயது- 64.

கொரோனாவுக்கு பலியான நாகராஜன் திருச்சி மாவட்டம் இனாம் புலியூரைச் சேர்ந்தவர்.

-பா.பாரதி