னாஜி

நேற்று மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தொடர்ந்து மும்பை, கோவா, நியூயார்க், டில்லி உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.  நியூயார்க்கில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   ஆயினும் கடந்த சில நாட்களாக அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருந்தார்.

நேற்று மாலை கோவா முதல்வரின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வந்தன.   நேற்று மாலை 6.40 மணிக்கு மனோகர் பாரிக்கர் காலமானார்.  சுமார் 63 வயதான இவர் 4 முறை கோவா முதல்வராக பதவி வகித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம் இந்திய ராணுவத்தினர் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய போது மனோகர் பாரிக்கர் ராணுவ அமைச்சராக இருந்தார்.  அதன் பிறகு அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு கோவா முதல்வராக பொறுப்பேற்றார்.  ஐஐடி பட்டம் பெற்ற ஒரே முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்லால் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள்,  தமிழக பாஜக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.