சென்னை:
ட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினாறாவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 11-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு, சென்னை-2, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தொடங்கவுள்ளது.

அவ்வமயம், இந்திய அரசமைப்பின் கீழ், மாண்புமிகு உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். சட்டமன்றப்பேரவைஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை (Certificate of Election) உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் தேர்தல்கள் 2021 ஆம் ஆண்டு மே திங்கள், 12 -ம் நாள், புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.