புதுச்சேரி: புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படுகின்றது.

புதுச்சேரி வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும்  ஒழுங்குமுறை விற்பனை  கூடங்கள் கொரோனா காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் விவசாயிகளின் நலன் கருதி திங்கட்கிழமை முதல் விற்பனைக் கூடங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி தட்டாஞ்சாவடி, கன்னியக்கோயில், மடுகரை, மதகடிப்பட்டு, கரையாம்புத்தூர், கூனிச்சம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இன்று  திறக்கப்பட்டன. ஆனால்  விவசாயிகளுக்கு உரிய முறையில் தகவல் போய் சேராதது,  போலீசாரின் கெடுபிடி காரணமாகவும் காலை 11 மணிவரை விவசாயிகள் யாரும் தங்களது பொருட்களை இங்கு கொண்டு வரவில்லை.

வழக்கமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களில் இருந்து நெல், மணிலா, காராமணி பயிர், உளுந்து போன்றவை இங்கு கொண்டுவரப்படும். கொரோனா காரணமாக 22 நாட்களுக்கு மேலாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூடப்பட்டு விவசாயிகள் யாரும் அங்கு வரவில்லை.

தற்பொழுது ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் திறக்கப்பட்ட விவசாயிகளுக்காக காத்திருக்கிறது. விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை  வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எடைபோடும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு சிரமத்துக்கு இடையே பணிக்கு வந்தும் விலை பொருட்கள் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். காவல் துறையின் கட்டுப்பாடுகளுக்கு இடையே பணிக்கு வந்தும் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவில்லை.

22 நாட்களாய் வேலையின்றி இருந்த ஊழியர்கள் தற்போது வேலைக்கு வந்தும் விவசாயிகள் வராத காரணத்தினால் திரும்பி செல்கின்றனர்.  புதுச்சேரி நகரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2000 மணிலா மூட்டைகள், உளுந்து 500 மூட்டைகள், ப.பயிர் 400 மூட்டைகள், காரமணி 300 மூட்டைகள், நெல் 1500 மூட்டைகள் என வரும்.தினமும் 300 விவசாயிகள் வரக்கூடிய இவ்விடம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

புதுச்சேரி அரசும், தமிழக அரசும் இணைந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் துவங்கப்பட்டு இருப்பதை விரிவாக விளம்பரப்படுத்தி விவசாயிகளை வரவழைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.