சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி பாடப் புத்தகத்தில், கொரோனா வைரஸ் குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணாக்கர்களும், வருங்கால சந்ததியினரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி பாடப் புத்தங்களில், இதுகுறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்திலும், கொரோனா வைரஸ் பாடங்கள் சேர்க்கப்படவுள்ளன.
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் பற்றிய பாடம் இடம்பெறவுள்ளது. நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், கொரோனா குறித்தப் பாடங்கள் இணைக்கப்படவுள்ளன.
கொரோனா வைரஸின் துவக்கம், அதன் வடிவம், அதில் இடம்பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங்களில் இடம்பெறும்.
இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.