டில்லி:
வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்பு ஒன்று பொதுநல மனு தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அமர்வில் நடைபெற்றது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற மனுக்கள் பெரும் தொல்லைகளை தருகிறது என்றும், தேசம், அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.