புதுச்சேரி:

புதுவை சட்டசபை கூட்டம்  இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் வைத்திலிங்கம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி மசோதா குறித்த அறிவிக்கையை முதல்வரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது ரங்கசாமி தலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி பேச ஆரம்பித்தார்.

அப்போது,  அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேச வேண்டும் என கூறினார்.

இதற்கிடையில் முதல்வர் நாராயணசாமியும்  அறிவிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். ரங்கசாமிக்கு பேச அனுமதி மறுத்தார் சபாநாயகர்.

இதையடுத்து  ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி அறிவிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது பின்னர் புதுச்சேரி அரசில் கவர்னர் கிரண்பேடி தலையீடு குறித்து அனைத்து கட்சியினரும் பரபரப்பு குற்றம் சாட்டினர்.

அரசுகொறடா அனந்தராமன் பேசும்போது, துணைநிலை ஆளுநர் கிரன்பேடியை மாற்றும் வரை பாராளுமன்றம் முன் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் அமர்ந்து போராடுவோம் என்றார்.

அதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த அன்பழகன் பேசும்போது,  துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்… புதுச்சேரியை விட்டு வெளியே போக முடியாது என்றார்.

மேலும், ஆளுநர் மாளிகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளது என்றும், புதுச்சேரிக்கு தடையாக இருக்கும் கிரண்பேடி யை திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.

மற்றும், துணைஆளுநர்,  சூப்பர் முதல்வரை போல் செயல்படுகிறார், இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் அவமரியாதை ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.